ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நேற்று ஈரானில் திடீர் தாக்குதல் நடத்தின. இதனால் அந்நாட்டின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த சூழலில், பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பேரட் வெளியிட்ட அந்நாட்டின் அழைப்பை ஏற்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரகால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்தில் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த போர் சூழல் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டெரெஸ், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது எனவும், உறுப்பு நாடுகள் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
















