துபாயில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அங்கு சிக்கிக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாய் விமான நிலையத்தில் தானும், தனது குழுவும் சிக்கிக் கொண்டதாகவும், இருப்பினும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களைப் போன்று ஏராளமான குடும்பங்களும் விமான நிலையத்தில் பலமணி நேரம் காத்திருப்பதாகவும், இந்த மோசமான சூழல் விரைவில் கடந்து போகும் எனவும், பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபுதாபி விமான நிலையத்தில் உள்ள இந்திய பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, விமான நிலைய விதிமுறைகளை இந்திய பயணிகள் பின்பற்ற வேண்டுமென தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
















