மாயமான Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விபத்துக்கு காரணம் என்ன?
ரஷ்யாவின் சுகோய், இரட்டை இருக்கைகள் கொண்ட பல்திறன் கொண்ட போர் விமானம் ஆகும். நீண்ட தூர தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போர் விமானங்கள் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளை எடுத்துச் சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும்.
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட Su-30MKI போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் முதுகெலும்பாக உள்ளது.
முதன்முதலில் 1997-ல் முதன்முதலாக ரஷ்யா இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை வழங்கியது. தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த சுகோய் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
சூப்பர் சோனிக் ரக தொழில்நுட்பத்தில் இயங்கும் சுகோய் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதே இந்த சுகோய் போர் விமானத்தின் சிறப்பம்சமாகும்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து கிளம்பி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஜோர்ஹட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது. சுகோய்-30 போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.
இந்நிலையில் கர்பி அங்லோங்கில் உள்ள மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டது.
ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் இந்த சுகோய் போர் விமானம் விபத்துகுள்ளானதாகவும் விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம், சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லை பகுதியில்தான் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.
இந்த வடகிழக்கு எல்லையருகே சீனாவின் விமானப்படை தளமும் உள்ளதால், சுகோய் போர் விமான விபத்துக்குச் சீனாவின் தந்திரம் காரணமா? என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக சீனாவின் விமானப்படை தளத்தில் இருந்து வந்த ரேடார் சிக்னல்கள், சுகோய் – 30 போர் விமானத்தை தவறாக வழிநடத்தியதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
















