ஈரான் வானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் சீறிப் பாய்ந்து உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற நோக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா ஏன் அமெரிக்கப் போர் விமானங்களை வாங்குவதில்லை என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிக பெரிய அளவில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுடன் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரான்சிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் என பாதுகாப்பு கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளபோதிலும், அமெரிக்காவிடமிருந்து எந்த போர் விமானத்தையும் வாங்க முன் வரவில்லை.
இரண்டாவது முறை அதிபரான பிறகு அதிபர் ட்ரம்ப், உலக அளவில் பிரபலமான F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்காவின் F-35, F-16 போன்ற போர் விமானங்கள் மீது இந்தியா ஆர்வம் காட்டவே இல்லை.
அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கும். இந்தியா ஏன் அமெரிக்காவின் போர் விமானங்களை மட்டும் வாங்க மறுப்பதற்கு வரலாற்று ரீதியாகவே நிறைய காரணங்கள் உள்ளன.
பனிப்போரின் போது F-86, F-104 ஸ்டார்ஃபைட்டர், F-86D, A-37, F-16 என முக்கியமான போர் விமானங்கள் உட்பட பல ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது. அவற்றையெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போர்களில் பயன்படுத்தியுள்ளது.
சோவியத் ரஷ்யாவின் மிக் ரக போர் விமானங்கள் மற்றும் சுகோய்-30MKI விமானங்கள், பிரிட்டனின் ஜாகுவார் விமானங்கள், பிரான்சின் மிராஜ் ரக விமானங்கள் என இந்தியா அமெரிக்காவை நம்பாமல் தனக்கான அடையாளத்துடன் கூடிய விமானப் படையை உருவாக்கியது.
1998-ல் இந்தியாவின் அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து அப்போதைய அதிபர் பில் கிளிண்டன், இந்தியா மீது பொருளாதார தடை விதித்தார். அதனால், அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்தன.
அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் நாடுகள் அந்த போர் விமானங்களின் பராமரிப்பு உதிரி பாகங்கள் போன்ற தேவைகளுக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கும் நிலை ஏற்படுகிறது.
F-16 போர்விமானத்தை வாங்கிய துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் உதிரி பாகங்களை அமெரிக்கா மறுத்த வரலாறு இருக்கிறது.
2019ஆம் ஆண்டு நடந்த பிப்ரவரியில் பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய F-16 விமானத்தை சோவியத் கால மிக்-21 பைசனை வைத்தே இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இது இனி எப்போதாவது அமெரிக்க போர் விமானங்களை இந்தியா வாங்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதை உலகறிய எடுத்துக்காட்டியது.
அதன் பிறகும் ஈகிள் II போர் விமானத்தின் மேம்பட்ட பதிப்பான F-15 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது.
ஒரு போர் விமானம் என்பது வெறும் ஆயுதமல்ல. அது நாட்டின் வான்வெளியை சொந்த விதிமுறைகளின்படி பாதுகாக்கும் திறன் கொண்ட இறையாண்மை யாகும்.
நாட்டின் இறையாண்மை கொண்ட வான்வெளியின் சாவியை தன்னிடமே வைத்து கொள்வது தான் சிறந்தது. இது ஆரம்பத்திலேயே சுதந்திர இந்தியா கற்றுக்கொண்ட பாடமாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான நவீன இந்தியா அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டிருந்த போதும் இந்திய வான்வெளிக்கான இறையாண்மையை கைவிடவில்லை.
வாசிக்க நேரமில்லையென்றால் இந்த ஆடியோவே கேளுங்கள்::
















