அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்தப் போரில் ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளில் இருந்தவாறு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதால் பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை ஏற்க முடியாது என கூறியுள்ள மசூத் பெஷேஷ்கியன், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
















