நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் உடலை ஒரு வாரத்திற்கு பின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த வாரம் கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அரிவாளால் தாக்கியதில் ஜான் மார்க் என்ற மாற்றுத்திறனாளியும், வடமாநில இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், நாங்குநேரியில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, ஜான் மார்க்கின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்மக்கள் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
















