சம்பந்தமே இல்லாத போருக்கு இழுத்து விட்டதன் மூலம், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக கத்தார் குற்றம்சாட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைகளைத் தொடங்கியபின்,பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எதிரியின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து இடைமறிக்கும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் வான்பாதுகாப்பு ரேடாரையும், அல் உதெய்த்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளத்தையும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கி அழித்துள்ளது.
மேலும் குவைத்,சவூதி அரேபியா,ஓமன்,பஹ்ரைன் ஜோர்டன் உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கத்தார் தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் தொலைபேசியில் பேசிய கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலே தவிர கத்தாருக்கு எதிரானதல்ல என்று அரக்சி கூறியதை ஏற்றுக்கொள்ளாத அல் தானி, குவைத்தில் ஒரு சிறுமி உட்பட பல அப்பாவி பொதுமக்கள் ஈரானின் தாக்குதலில் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரான், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தங்களுக்கு நேரடியாக சம்பந்தம் இல்லாத போரில் ஈரான் தங்களை இழுத்து விட்டதால் வளைகுடா நாடுகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அந்நாடுகளைக் காட்டி கொடுத்து விட்டதாகவும் கத்தார் பிரதமர் அல் தானி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வளைகுடா நாடுகள் மற்றும் மோதலில் நேரடியாக ஈடுபடாத பிற நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை “ஆபத்தான தவறான கணக்கீடு” என்று விவரித்த அல் தானி, இதனால் வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எதிராக போரில் இறங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே கத்தார் பிரதமர் அல் தானி தலையீட்டின் பேரில் தான் கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாட்கள் இஸ்ரேல் ஈரான் போர் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
வளைகுடாவின் பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவத் தளங்களைத் தங்கள் நாட்டில் அனுமதித்துள்ள போதிலும், ஈரானுடனும் நல்லுறவையே பேணி வருகின்றன.
வளைகுடா நாடுகள் முழுவதும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரானுடனான அந்நாடுகளின் உறவுகளை சிக்கலாக்கி உள்ளன.
கத்தார் பிரதமர் உட்பட மற்ற வளைகுடா நாட்டு தலைவர்களும் ஈரானுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் வளைகுடா உலகின் மிகப்பெரிய போர்க்களமாகும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
















