திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவிற்கு எதிராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ‘DMK Files’ என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.
இதில் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்ணாமலை அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, சேது சமுத்திரத் திட்டம், மதுபான ஆலைகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து அண்ணாமலை சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கையில், டி.ஆர். பாலு சில கேள்விகளை மறுத்ததோடு, அண்ணாமலை மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும்,
இந்தக் குற்றச்சாட்டுகள் தனது மற்றும் தனது மனைவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி டி.ஆர் பாலு மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
















