தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள் என உயிரிழந்த மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு வயக்காட்டு பகுதிக்கு சென்ற மகள் வீடு திரும்பில்லை என்றும், விடிய விடிய மகளை தேடி அலைந்ததாகவும் கூறினார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய உறவினர்கள், மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றபோது மனுவை வாங்காமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாக கூறினர். வயகாட்டுப் பகுதியில் காலை 11 மணிக்கு தேடி பார்த்தபோது எதுவும் இல்லாத நிலையில், பகல் 2 மணிக்கு அந்த இடத்தில் மாணவியின் சடலத்தை கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைத செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரித்து சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு மாணவி காணாமல்போன புகாரை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்காலம் எனவும் தெரிவித்தார்.
மாணவி சடலம் கிடைக்கப்பெற்ற பின்பே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் சிறந்த மாநிலம் என்று எதனடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.
















