ஈரானுக்கு எதிராக போர் செய்யும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக ஈரான் மறைமுகப் போரை Proxy War நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஈரானின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ பழிதீர்க்கும் வகையில் திடீர் தாக்குதல்களை நடத்தலாம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் FBI எச்சரித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்திவருகிறது.
அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த உச்ச தலைவரின் மகனான மொஜ்தபா கொமேனியும், அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகள் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலை ஒரு ‘அச்சுறுத்தல்களின் சங்கமம்’ என்று அமெரிக்காவின் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஆலோசகர் சார்லஸ் மரினோ குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது போலவே அமெரிக்காவிலும் நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
குறுகிய நேர தாக்குதலில் அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் முக்கிய மால்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு தேசிய சிறப்பு பாதுகாப்பு நிகழ்வாக கருதப்பட்டாலும், அது ஈரான் ஸ்லீப்பர் செல்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஸ்லீப்பர் செல்கள் தனித் தனியாகவே அல்லது ஒருங்கிணைந்த குழுக்களாகவோ ஈரான் ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களை நடத்த ஈரானிடமிருந்தோ இஸ்லாமிய புரட்சிகர காவல் படையிலிருந்தோ எந்த உத்தரவும் வரவேண்டியது இல்லை என்றும், உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் படுகொலை, இந்த ஸ்லீப்பர் செல்களைத் தாக்குதல் நடத்த வைக்கும் என்றும் சார்லஸ் மரினோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஈரான் ஸ்லீப்பர் செல்களை முன்கூட்டியே அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்று கூறப்படும் நிலையில் நாடு முழுவதும் தீவிரமான கண்காணிப்பை உறுதிப்படுத்தி, ஸ்லீப்பர் செல்களின் சதித் திட்டங்களை முறியடிக்க FBI இயக்குனர் காஷ் படேல் உத்தரவிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் தலைவர்கள், மத வழிபாட்டு தலங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் காவல் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவியுள்ள ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் அங்குள்ள அமெரிக்கத் தூதரகங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன. ஏற்கெனவே கடந்த சில வாரங்களில் மட்டும் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த ஸ்லீப்பர் செல்களின் பயங்கரவாதச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா தனது எல்லையைப் பாதுகாப்பதில் கோட்டை விட்டுவிட்டதாகவும், ஈரான் பயங்கரவாதிகள் எளிதில் நுழைந்து விட்டதாகவும் செனட்டர் டெட் க்ரூஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் சைபர் தாக்குதல் நடத்த ஈரான் ஹேக்கர்கள் ஏற்கனவே அமெரிக்காவின் வங்கி அமைப்புகள், மின் விநியோக கட்டமைப்பு மற்றும் மருத்துவமனைகளின் இணையதளங்களைக் கண்காணித்து வருவதாக சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் தொடங்கிய நேரடி போர் ‘நிழல் போராக’ சர்வதேச அளவில் பரவக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
















