மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பதுக்கலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை எல்.பி.ஜி. சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் வீட்டின் அருகே காலி இடத்தில் சோதனை நடைபெற்றது. இதில், கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட 209 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் என்பவரது வீட்டின் அருகே சோதனை நடைபெற்றது. இதில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட 189 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு இடங்களிலும் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
















