தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை? என கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
















