ஈரான் தலைவர்களை கொல்வது அமெரிக்காவின் அதிபராகிய தனக்கு ஒரு பெரும் கௌரவம் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்று வரும் ஈரான் தலைவர்களை அழிப்பது, அமெரிக்காவின் 47-வது அதிபரான தமக்குக் கிடைக்கும் பெரும் கௌரவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராணுவம் மற்றும் பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் ஈரானை முழுமையாக அழித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அதிரடி அறிக்கை தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அயதுல்லா மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி இன்னும் உயிருடன் இருப்பதாகத் தான் நம்புவதாகவும், ஆனால் அவர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், அவர் குறித்த டிரம்பின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
















