புதுச்சேரியில் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை திமுகவினர் ஒருமணி நேரமாக காக்க வைத்த சம்பவம் இருகட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் முடிந்த நிலையில், புதுச்சேரியில் இரு கட்சிகள் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இழுபறியாக இருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்தியலிங்கம், சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட 7 பேரும், திமுக சார்பில் எம்பி ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















