ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் மூழ்கடிக்கப் பட்டதற்கும் இந்தியாவுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை உண்மையில் இந்தியா ஈரானுக்கு உதவி செய்துள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் IRIS Dena போர்ட் கப்பல் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விசாகப்பட்டினத்தில் பல்முனை கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு ஈரான் போர்க்கப்பலான ‘IRIS Dena’ வந்திருந்தது.
கடந்த மார்ச் 4ம் தேதி பயிற்சி முடிந்து நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கரையோரத்தில் GALLE-வுக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் எதிர்பாராத தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ‘டார்பிடோ’ தாக்குதலில் ‘IRIS Dena’ வில் இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
ஈரான் போர்ச் சூழலில் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவில் பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவின் கடல்சார் அதிகார வரம்புக்குள் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இருப்பதாக மத்திய அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.
இந்திய அரசு உண்மையாகவே பெரிதும் உதவியதாக கூறிய அவர், துரதிர்ஷ்டவசமாக, வேறு சில நாடுகள் ஒத்துழைக்க மறுத்துவிட்டன என்றும் கூறியுள்ளார்.
மேலும்,எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் ஈரான் விட்டுவிடுவதில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இதே மாநாட்டில் பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே ‘IRIS Dena’ தாக்குதலுக்குள்ளான சம்பவம், சர்வதேச சட்டம், கடல்சார் விதிமுறைகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய சக்திகளின் நடத்தை பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்புவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் IRIS Dena-வை தனது கடல் எல்லை வரை பத்திரமாக வழியனுப்பியது, IRIS Lavan-க்கு அடைக்கலம் கொடுத்தது என ஈரான் போர்க்கப்பல்களுக்கு இந்தியா தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தது என்பதையும் ஈரானின் தூதரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியதன் மூலம் இந்திய அரசியலில் எழுந்த தேவையில்லாத விவாதங்களுக்கு ஈரான் தூதரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
















