தற்காலிக நடவடிக்கையாக கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் எண்ணெயை வாங்கினால் வரி விதிக்கப்படும் என்று முன்பு கூறிய அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் மீது நடத்திவரும் போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார் மற்றும் சவூதியில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளையும் ஈரான் தாக்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு கிட்டத்தட்ட 120 டாலரை எட்டியது. இது போருக்கு முந்தைய அளவை விட சுமார் 35 சதவீதம் அதிகமாகும்.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிசக்தியை பெரிதும் நம்பியுள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தற்காலிகமாக இந்தியாவை சுமார் ஒரு மாதத்துக்கு மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதியளித்த அமெரிக்கா, இப்போது மற்ற நாடுகளுக்கும் இந்த அனுமதியை வழங்கியுள்ளது..
உலகளாவிய எரிசக்திச் சந்தையில் எண்ணெய் விநியோகத்தின் வரம்பை விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
கடல் போக்குவரத்தில் உள்ள ரஷ்ய எண்ணெய்க்கு மட்டுமே இந்த அனுமதி பொருந்தும் என்று கூறியுள்ள ஸ்காட் பெசென்ட், தனது எரிசக்தி வருவாயில் பெரும்பகுதியை, எண்ணெய் எடுக்கப்படும் இடத்திலேயே விதிக்கப்படும் வரிகள் மூலமாகவே ரஷ்யா ஈட்டுவதால் ரஷ்யாவுக்கு எந்த பெரிய லாபமும் இருக்காது என்றும் விவரித்துள்ளார்.
ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 6 பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை ரஷ்யா பெற்றுள்ளதாக மைனேயின் செனட்டர் அங்கஸ் கிங் அமெரிக்க இராணுவத் தளபதிகளிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவரான பிறகு மொஜ்தபா கொமேனி, வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய அதிபர் ட்ரம்ப், புதின் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
















