ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை, நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டன.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் போரால் ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது தடைபட்டுள்ளது. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பயன்படும் இந்த வர்த்தகப் பாதை தடைபட்டதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தங்கள் நாட்டு கப்பல்கள், எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார். ஆனால் அதில் ஆபத்து நிறைய இருப்பதை உணர்ந்த அவர், அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். பின்னர், உலக நாடுகளுக்கு, குறிப்பாக நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகள், தங்கள் நாட்டு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ட்ரம்ப் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, எஸ்தோனியா ஆகிய நாடுகளும் தங்கள் போர்க் கப்பல்களை அனுப்பி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டன. இப்படி யாருமே முன்வராத நிலையில், ட்ரம்ப்பின் கோபத்தை எதிர்கொள்வதை எண்ணி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பதைபதைப்புடன் இருப்பதாக விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
















