திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடும் இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அடம் பிடித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
















