மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2019-ல் 6 ஆயிரத்து 984 வழக்குகளும், 2020-ல் 6 ஆயிரத்து 630 வழக்குகளும், 2021-ல் 8 ஆயிரத்து 501 வழக்குகளும், 2022-ல் 9 ஆயிரத்து 207 வழக்குகளும், 2023-ல் 8 ஆயிரத்து 943 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மொத்தமாக இந்த காலகட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு கொண்டு வந்த நிர்பயா நிதியின் பயன்பாடு குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதியை அறிமுகப்படுத்தியது. இந்த நிதி மூலம் பாதுகாப்பான பொது இடங்கள் அமைத்தல், சிசிடிவி கண்காணிப்பு, அவசர உதவி மையங்கள், One Stop Centre, Women Helpline 181, Safe City போன்ற திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு நிர்பயா நிதியாக மொத்தம் 425.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 353.69 கோடி ரூபாய் வரை விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசால் 45.86 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் குறைந்த அளவு செலவினமே பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமடைய முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன் சென்னை காவல்துறை மூலம் இந்த நிதியில் இருந்து, பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்து, கட்டுப்பாட்டு மையங்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Women Helpline சேவைகள் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பெண்கள் பாதுகாப்பைத் தாண்டி அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அரசால் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும்முன்வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது, அரசின் செயல்திறன் குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுப்பியுள்ளது.
















