3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3வது குழந்தையை பெற்றெடுக்க சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீலகிரியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியை சுமைதா ரகபத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 3வது குழந்தையை பிரசுவிக்க மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், 2 குழந்தைகள் பெறத்தான் மகப்பேறு விடுமுறை வழங்க அரசாணை இருப்பதாகவும், 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க அரசாணையில் குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, வட்டார கல்வி வளர்ச்சி அதிகாரி மனுதாரரர் கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி 3வது குழந்தையை பெற்றெடுக்க சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என ஆணையிட்டார்.
















