மதுரையில் பெய்த கனமழையால் வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரை மாநகரின் பிரதான பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், எல்லிஸ்நகர், சிம்மக்கல், மதுரை ரயில்வே நிலையம், வைகை ஆற்றுக் கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தேங்கியது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் பழுதடைந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சி நிரந்தர தீர்வு காணாததால் சிறிய அளவு மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சாலைகளில் மழை நீர் தேங்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















