கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதில், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உரத்துறையில் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு மற்றும் மாற்றுப் பாதைகள் மூலம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், முழு திறனுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும், சமையல் எரிவாயு உற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், பீதி காரணமாக முன்பதிவுகளை தவிர்க்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
















