கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா சந்திப்பில் நடக்கும் மெட்ரோ கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரி கொல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மேற்குவங்க அரசுக்கு ஏற்றபடியே கொல்கத்தா உயர்நீதிமன்றம் மிகவும் தாராளமாக நடந்து கொண்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
மாநில தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கடமையாற்ற தவறி விட்டனர் என்றும், அதிகாரிகளின் பிடிவாதமான போக்கையே இது காட்டுகிறது எனவும் கூறினர்.
மேலும், மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















