மத்திய கிழக்கு போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் துபாய்க்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கார்கள் கென்யாவில் தேக்கமடைந்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால், கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சரக்குக் கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கென்யாவின் நவீனத் துறைமுகமான லாமு, சரக்குகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்குள்ள வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான புதிய கார்கள் உரிய இடத்திற்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளன.
இந்தக் கார்களில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை.
போர் காரணமாக காப்பீட்டுக் கட்டணம் உயர்ந்துள்ளதாலும், ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சியும் கப்பல் நிறுவனங்கள் பயணத்தைத் தள்ளி வைத்துள்ளன.
கார்கள் நீண்ட காலம் வெட்டவெளியில் நிறுத்தப்படுவதால், கடல் காற்றின் உப்புத்தன்மையால் அவற்றின் தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் கார் டீலர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கென்யாவின் லாமு துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மற்ற சரக்குகளைக் கையாளுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
















