ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல், ராணுவ தாக்குதல்களைத் தாண்டி, மீம்கள் மற்றும் தகவல் போரின் வழியாக புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இதில் டிரம்பை கேலி செய்த ஈரானின் நடவடிக்கைகள், நிலைமையை மேலும் பதற்றப்படுத்தியுள்ளன. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
உலக அரசியல் மேடையில் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில், நேரடி ராணுவ மோதல்களுக்கு இணையாக தகவல் போரும், மனநிலை தாக்குதல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக சமூக ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், உலக நாடுகளின் தலைவர்களும், அரசுகளும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், எதிரிகளை மன ரீதியாக பலவீனப்படுத்தவும் நகைச்சுவை, மீம்கள் மற்றும் டிஜிட்டல் பிரசாரங்களை அதிகமாக பயன்படுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழலில், சிறிய கருத்து மோதல்கூட பெரிய அரசியல் மற்றும் ராணுவ விளைவுகளுக்கு வழிவகுக்கும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில், ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது ஏவுகணைகளைத் தாண்டி, இணைய மீம்களாலும் தீவிரமடைந்து வருகிறது. அண்மையில், ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது நடத்த திட்டமிட தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு அமைதியாக பதிலளிக்காமல், தெஹ்ரான் அதற்கு எதிர்வினையாக அதிபர் டிரம்பை கிண்டலடிக்கும் வகையில் பல மீம்கள், வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை பதிவுகளை வெளியிட்டு, அவரை பலவீனமாக காட்ட முயன்றது.
முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிய அவர், ஈரானுடன் நேரடி மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூறினார். இதை நேரடியாக மறுத்த ஈரான், டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து, “Trump Always Chickens Out” போன்ற கிண்டல் வாசகங்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.
அத்துடன், ஈரான் வெளியிட்ட LEGO-style animation வீடியோக்களில், அமெரிக்க கடற்படையை தாக்கும் காட்சிகள் மற்றும் டிரம்ப் பதற்றத்துடன் காணப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில், தங்களை “ஜலசந்திகளின் அதிபதி” என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று, ஈரானின் புரட்சிகர காவல் படை அதிகாரி ஒருவரும், டிரம்பின் பிரபலமான “You are fired” என்ற வசனத்தை மேற்கோள்காட்டி அவரையே கேலி செய்து பேசியிருந்தார். இத்தகைய சூழலில், இவ்வகை அணுகுமுறைகள் அபாயகரமாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக, அதிபர் டிரம்ப் தன் மீதான விமர்சனங்களுக்கும், அவமதிப்பான பேச்சுகளுக்கும் கடுமையாக பதிலளிப்பவர் என்ற வரலாறு உள்ளது. இந்தியாவுடனான உறவுகளிலும் அவரது எதிர்வினைகள் இதே ரீதியில் இருந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு அவரது கோரிக்கைகளை இந்தியா ஏற்க மறுத்தபோது, இந்தியாவை குறிவைத்து டிரம்ப் கடும் விமர்சனங்களை வெளியிட்டார். அதேபோன்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், டிரம்பின் ஆதரவைப் பெறும் சூழலில் போதுமான நன்றி தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், பொதுமக்கள் முன் அவமதிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இப்படியான சூழலில், ஈரான் தற்போது அதிபர் டிரம்பை பொதுவெளியில் கேலி செய்வது, நிலைமையை மேலும் மோசமாக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. ஈரானுக்கு இது உள்நாட்டு ஆதரவைப் பெற உதவினாலும், டிரம்பின் கோபத்தை தூண்டி மோதலை அதிகரிக்கக்கூடும் என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதேவேளையில், அமெரிக்க கடற்படைகள் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த 5 நாட்கள் இடைவேளை உண்மையான அமைதி முயற்சியா அல்லது பெரிய தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கால அவகாசமா என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில், ராணுவம் மற்றும் தகவல் போர் இணைந்து நடைபெறும் இந்த மோதலில், இறுதியாக யார் முன்னிலை பெறுவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
















