புளியங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து 16 மணி நேரமாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த மாரிசாமி – வேல்மயில் தம்பதியினரின் 4 வயது மகள் தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், பள்ளி வளாகத்திற்குள் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்துக்கு தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 16 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
















