தேமுதிகவுக்கு 6 தொகுதிகளை மட்டுமே கொடுப்போம் எனக்கூறி திமுக தங்களை ஏமாற்றிவிட்டதால் கூட்டணி கட்சிகள் வேதனையில் இருப்பதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும், அதனால் ஒரு தொகுதியை விட்டுத்தருமாறும் திமுக தலைமை கூறியது என தெரிவித்தார்.
இதே போல கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடமும் தேமுதிகவை காரணம் காட்டி தொகுதிகள் குறைக்கப்பட்டதாக தெரிவித்த காதர் மொகிதீன், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என வேதனை தெரிவித்தார்.
மேலும் ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின் பேசி பயனில்லை என தெரிவித்த அவர் திமுக தங்களை ஏமாற்றிவிட்டது எனவும் கூட்டணி கட்சியினர் வேதனையில் இருப்பதாகவும் கூறினார்.
















