மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக எண்ணெய் விநியோகத்தை அதிகம் சார்ந்துள்ள பல நாடுகள் மாற்று வழிகள், சேமிப்பு வாய்ப்புகள் மற்றும் விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், உலக எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளின் முதுகெலும்பாக கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பிரச்னைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
நீண்ட காலமாக ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா – ஈரான் மோதலால், இந்த கடல் வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஜலசந்தியில் சீரான கப்பல் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால், பயண செலவுகள் அதிகரித்து, அச்சமும், உறுதியற்ற சூழலும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால், இயற்கை எரிவாயு விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இதனால், ஜலசந்தியை முழுமையாக மூடாமல், ஈரான் தனது நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே கப்பல்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
அனுமதி இல்லாமல் கடக்க முயன்ற 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் 138 கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுள்ள நிலையில், இது வழக்கமான அளவைவிட 95 சதவீதம் குறைவு என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், தற்போது சுமார் 2 ஆயிரம் கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காக அப்பகுதியில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்குகிறது. குறிப்பாக, சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் அனுமதி பெறுகின்றன. மேலும் சில கப்பல்கள் தங்களை சீனாவுடன் தொடர்புடையதாகக் காட்டி அனுமதி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா நோக்கிச் செல்லும் சில கப்பல்களும் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ள நிலையில், பல இந்திய கப்பல்கள் இன்னும் அனுமதிக்காக காத்திருக்கின்றன.
அதேபோல, ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க விரும்பும் கப்பல்கள் முதலில் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய இடைத்தரகர்களை அணுக வேண்டும். பின்னர், கப்பலின் விவரங்கள், சரக்கு, பயண திசை, பணியாளர்கள் போன்ற தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன.
அனுமதி கிடைத்தால், குறிப்பிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் கப்பல்கள் வழி நடத்தப்படுகின்றன. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு கப்பல் கடப்பதற்கு சுமார் 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக காப்பீட்டு கட்டணங்ளும் அதிகரித்து, ஒரு பயணத்தின் செலவு பல மில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், ஈரான் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக வரும் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது.
மொத்தத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பது போல் தோன்றினாலும், அதிக அபாயங்கள், உயர்ந்த செலவுகள் மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் காரணமாக, உலக வர்த்தகத்திற்கான முக்கிய பாதை தற்போது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.
















