நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தைப் பற்றி, தவெக தொண்டர்கள் தரக்குறைவாக பேசியபோது விஜய் எங்கு சென்றிருந்தார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்ராஜ் குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான் சமூகம் சீரழிந்து வரும் வருத்தத்தில் பொன்ராஜ் அதுபோல் பேசியிருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும், பொன்ராஜ் மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ள விஜய், தன்னையும், நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் குடும்பத்தையும், தவெக தொண்டர்கள் தரக்குறைவாக பேசி பதிவிட்டபோது எங்கு சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினார்.
அந்த சமயத்தில் தனது கட்சியினருக்கு அறிவுரை வழங்கி அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், தற்போது பொன்ராஜ் மீது புகாரளிக்க விஜய் தகுதியுடையவராக இருந்திருப்பார் என்றும் சீமான் கூறினார்.
அத்துடன் பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே விஜய் இந்த புகாரை நேரில் சென்று அளித்துள்ளதாகவும் சீமான் தெரிவித்தார்.
















