நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனிலும், நேரடியாகவும் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஜூலை 17ஆம் தேதி முதல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின் எட்டாவது முறையாக நாளை மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது என்றும், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக விவரங்களை பதிவு செய்ய ‘சுய விபரம்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், செயலி மூலம் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு நேரில் வரும்போது 16 இலக்க எண்ணை வழங்கினால் போதும் என்றும், வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும்,
இரண்டாம் கட்டமாக சாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தரவுகள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
==
















