தெலங்கானாவில் காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மகனுக்கு ஆண்டுதோறும் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த லாலு – சுக்கம்மா தம்பதியின் மகன் ராம்கோட்டி.
இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ராம்கோட்டி உயிரை மாய்த்துக் கொண்டார்.
அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த சுக்கம்மாவின் கனவில் தோன்றிய ராம்கோட்டி, தனக்கும் தன் காதலிக்கும் திருமணம் செய்து வைத்து, தங்களுக்கு ஒரு கோயில் எழுப்புமாறு கூறியுள்ளார்.
இதனை மகனின் கடைசி ஆசையாக கருதிய பெற்றோர், தங்கள் வீட்டிலேயே மகனுக்கும் அவர் காதலிக்கும் சிறிய கோயில் போன்ற அமைப்பை உருவாக்கி 22 ஆண்டுகளாக திருமணம் செய்து வைப்பதை சடங்காக பின்பற்றி வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்போது அந்த கிராமத்தின் முக்கிய விழாவாக மாறியுள்ளது.
















