நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் ஆரோக்கியமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஒரு சாதாரண பிளாஸ்டிக் தேநீர் பையை சூடான நீரில் நனைக்கும்போது, அதில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 3.1 பில்லியன் நேனோபிளாஸ்டிக் துகள்களும் வெளியேறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மற்ற உணவுகளில் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் அளவை விட பல மடங்கு அதிகம்.
பெரும்பாலான பிரீமியம் தேநீர் பைகள் காகிதத்திற்குப் பதிலாக நைலான் அல்லது
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் போன்ற பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படுகின்றன.
இவை அதிக வெப்பநிலையில் தண்ணீரில் ஊறும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களாகப் பிரிகின்றன.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் செரிமான மண்டலம் மற்றும் குடல் செல்களால் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆய்வின்படி, இந்த துகள்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
















