நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆலையில் உள்ள உட்கட்டமைப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டு, பொறியாளர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கெய்ன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஒரு வலிமையான அங்கம் எனவும் புதிய உற்பத்தி ஆலை தொடங்கப்படுவதன் மூலம், சர்வதேச அளவில் நம்பகமான செமிகண்டக்டர் விநியோகஸ்தர் என்ற பங்கை இந்தியா உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் துறை எவ்வளவு அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி எனவும் இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம் என்ற திட்டத்தின் தாக்கம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.
















