முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட Bharath Space Vehicle நிறுவனம், அகஸ்தியா-1 ராக்கெட்டை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்குள் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த முயற்சி இந்தியாவின் தனியார் விண்வெளி துறைக்கு புதிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய செயற்கைக்கோள் சந்தையில், இந்தியா தனது பங்கைக் அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், குறைந்த செலவில், விரைவான மற்றும் நம்பகமான ஏவுதள சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் பேரிடர் கண்காணிப்பு துறைகளில் உடனடி செயற்கைக்கோள் ஏவுதல் அவசியமாகி வருவதால், தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படியான மாற்றங்களுக்கிடையே, புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளுடன் இந்தியாவின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.
அந்த வகையில், சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Bharath Space Vehicle நிறுவனம், தனியார் விண்வெளி துறையில் கவனம் ஈர்த்து வருகிறது. 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இஸ்ரோவில் 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட விஞ்ஞானிகள் குழுவால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது “அகஸ்தியா-1” என்ற 28 மீட்டர் உயரமுள்ள இரு நிலை ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இதில், LOX/RP-1 எனப்படும் திரவ ஆக்சிஜன் மற்றும் கெரோசின் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் சுமார் 500 கிலோ எடையுடைய செயற்கைக்கோள்களை Sun-synchronous polar orbit-க்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. மேலும், இதனால் 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள Low Earth Orbit-க்கு சுமார் 800 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் திட எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், Bharath Space Vehicle திரவ எரிபொருளைத் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், ஏவுதலுக்கு முன் முழுமையான சோதனைகள் நடத்த முடியும். இரண்டாம் நிலை இயந்திரத்தை 10 முதல் 40 விநாடிகள் வரை ‘Hot-fire’ சோதனை செய்யலாம். முதல் நிலை இயந்திரத்தையும் ஏவுதலுக்கு முன் சில விநாடிகள் சோதிக்க முடியும். இதனால், ஏவுதலின்போது தோல்வி ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும், 24 மணி நேர முன்னறிவிப்பில் ராக்கெட்டை ஏவுவதற்கான தயார்நிலையை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் இஸ்ரோவின் முன்னாள் LPSC இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான என். வேதாச்சலம் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடன், SLV-3 திட்டத்தில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பணியாற்றிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.வி. ஷர்மா மற்றும் தலைமை நிதி அதிகாரி பவின் பட்டேல் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில், குஜராத்தின் கோடிநார் பகுதியில் புதிய ஏவுதளம் அமைக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. கடற்கரை அருகில் அமைந்துள்ள இந்த இடம் ஏவுதலுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மேற்குக் கடற்கரை பகுதியில் இந்தியாவுக்கு முதல் செயற்கைக்கோள் ஏவுதளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
2023-ம் ஆண்டின் புதிய விண்வெளி கொள்கையின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு திறக்கப்பட்ட நிலையில், Bharath Space Vehicle, Skyroot Aerospace மற்றும் Agnikul Cosmos போன்ற நிறுவனங்கள் குறைந்த செலவில் ஏவுதலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், இஸ்ரோ அனுபவம் கொண்ட விஞ்ஞானிகள் தொடங்கிய இந்த முயற்சி, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
















