அர்ஜென்டினா மீண்டும் உலககோப்பையை வெல்லுமா என்ற கேள்வியுடன் உலகத்துக்கே லயோனல் மெஸ்ஸி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணியை சூப்பர் அணியாக மாற்றிக் கொடுத்த சூத்திரதாரி யார் ? அவரின் திட்டங்கள் மற்றும் அவரின் அணுகுமுறைகள் மற்றும் செயல் திட்டங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் 48 அணிகள் பங்கேற்ற, 30 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த ஆண்டுக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதுகின்றன.
வாழ்க்கையில் நாம் எத்தனை முறை கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல.. விழுகிற போதெல்லாம் எழுந்து நிற்கிறோமா என்பது தான் கேள்வி என்ற வாசகத்துடன் லயோனல் மெஸ்ஸி கண்ணீர் விடும் புகைப்படங்களையும், வெற்றிபெற்ற போது உலகக்கோப்பையை அவர் உயர்த்தி காட்டும் புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
கீழே விழுந்த துயரில் இருந்த மெஸ்ஸியை மட்டுமல்ல அர்ஜென்டினா அணியையும் தூக்கிவிட கைகள் இருந்திருக்கும் அல்லவா ? அது லயோனல் ஸ்கலோனியின் கைகள். யார் இந்த லயோனல் ஸ்கலோனி ?
2018-ல் தடுமாற்றத்தில் இருந்த அணிக்கு ஒரு தற்காலிக பயிற்சியாளராக பொறுப்பேற்று உலக கால்பந்து அணிகளில் தலைசிறந்த அணியாக அர்ஜென்டினா அணியை மாற்றியவர்.
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற லயோனல் ஸ்கலோனிக்கு, போதுமான அனுபவம் இல்லை என்று கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை பற்றிய எந்த விமர்சனத்துக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை லயோனல் ஸ்கலோனி.
2019ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு முன்னதாக அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட லயோனல் ஸ்கலோனி, அர்ஜென்டினா அணியை 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வெல்ல வைத்தார். 2022 இறுதிசிமா பட்டத்தையும் 2024-ல் கோபா அமெரிக்கா பட்டத்தையும் வென்று கொடுத்தார்.
36 ஆண்டுகளாக உலகக்கோப்பையை எப்போதும் வெல்வோம் என்று ஏங்கிய அர்ஜென்டினா மக்களின் கனவை 2022-ல் நிறைவேற்றியவர்.
2016ம் ஆண்டு லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது, “போகாதே லியோ” என்று பதிவிட்டிருந்த லயோனல் ஸ்கலோனி ,அவரை மீண்டும் விளையாட வைத்தவர்.
ஓய்வை திரும்ப பெற்று மெஸ்ஸி மீண்டும் கால்பந்து விளையாட்டிற்கு திரும்பினாலும், தோல்விகள் மட்டும் துரத்திக்கொண்டே இருந்தது.
பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவுடன் ஆடிய லயோனல் மெஸ்ஸிக்கு, ஒரு வழிகாட்டியாக துணை நின்றவர். காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என்று ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஃபார்மேஷனில் களமிறங்கி எதிரணிகளை திக்குமுக்காட வைத்தவர்.
லியோனல் மெஸ்ஸியை மையமாக வைத்து ஒரு தந்திரமான வியூகத்தை அமைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஒற்றுமையை உருவாக்கி அர்ஜென்டினாவின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தவர். மெஸ்ஸியின் திறமைக்கு ஏற்ப அணியின் உத்திகளை மாற்றியமைத்த லயோனல் ஸ்கலோனி, மெஸ்ஸி களத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக, மற்ற வீரர்கள் மெஸ்ஸிக்காக கடுமையாக உழைக்கும்படி ஒரு வலுவான அணி கட்டமைப்பை உருவாக்கினார்.
வீரர்களுக்கிடையே இருந்த ஈகோவை நீக்கிவிட்டு, குடும்பத்தைப் போன்ற ஒற்றுமையை அணியில் கொண்டுவந்த ஸ்கலோனி நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பியிருக்காமல், இளம் வீரர்களான என்சோ ஃபெர்னாண்டஸ் மற்றும் ஜூலியன் அல்வாரெஸ் போன்றோரையும் சேர்த்து அணியின் வேகத்தை அதிகரித்தார்.
ஒற்றுமை, ஒழுக்கம், தந்திர நுணுக்கம் மற்றும் வெற்றிக்கான மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் ஸ்கலோனி உருவாக்கிய அர்ஜென்டினா அணி ரசிகர்களால் அன்புடன் “La Scaloneta” (ஸ்கலோனெட்டா) என்று அழைக்கப்படுகிறது.
இதுவரை 103 போட்டிகள், 80 வெற்றிகள், 14 டிரா, 9 தோல்விகள், 77.7% வெற்றி விகிதம் என்ற சாதனையை ஸ்கலோனி உருவாக்கியுள்ளார். “La Scaloneta” என்பது வெறும் பெயரல்ல அல்ல அது உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்களின் பெருமை.
1958 மற்றும் 1962-ல் பிரேசில் வென்றதற்குப் பிறகு, எந்த அணியும் தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதில்லை . ஏற்கனவே சாதனைகளால் நிரம்பி வழியும் தனது சாதனைப் பட்டியலில், இன்னொன்றைச் சேர்க்க லயோனல் மெஸ்ஸிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா களம் காணவுள்ள நிலையில் தொடர் வெற்றியை பெற்று சரித்திர சாதனையை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
















