வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோவில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப்பாதுகாவலர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த அனுமதியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரியும், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் மனுத்தாக்கல் செய்தார்.
யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை பணியமர்த்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.
















