வங்கதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த, மிசோரம் மாநிலத்தில் மற்றொரு ராணுவத் தளத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை ஆராய்கிறது இந்த செய்தித்தொகுப்பு…….
இந்திய வரைபடத்தை உற்று நோக்கினால், ஒரு கோழியின் கழுத்தைப் போல மிகக் குறுகிய, ஒடுங்கிய நிலப்பகுதி தென்படும். அதுதான் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி வழித்தடம். ராணுவத்தில் இது ‘சிக்கன்ஸ் நெக்’ (Chicken’s Neck) என்று அழைக்கப்படுகிறது.
20 முதல் 22 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சிறிய பாதைதான், அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 8 மாநிலங்களை இணைக்கும் ஒரே ஒரு தரைவழிப் போக்குவரத்திற்கான வழித்தடமாகும்.
இதன் வடக்கே நேபாளம் மற்றும் பூடான் நாடுகளும், தெற்கே வங்கதேசமும் எல்லைகளாக உள்ளன. போர்க் காலத்தில் எதிரி நாடுகள் குறுகிய அகலமுள்ள சிலிகுரி பாதையைத் தாக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பு ஒட்டுமொத்தமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்பு மையமாக கருதப்படுகிறது.
வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு வருகை வந்ததும், சீன நிறுவனங்கள் சிலிகுரிக்கு மிக அருகில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள வங்கதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும், நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பர்வா (Parva ) பகுதியில் நான்காவது ராணுவத் தளத்தை அமைப்பதற்கான திட்டங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்த புதிய தளம், நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில் ஒரு முழுமையான பாதுகாப்பு அரணை உருவாக்கும்.
‘சிக்கன்ஸ் நெக்’ என அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடத்தைப் பாதுகாக்க, மேற்கு வங்கத்தின் சோப்ரா(Chopra), பீகாரின் கிஷன்கஞ்ச்(Kishanganj), அசாமின் துப்ரி(Dhubri) ஆகிய இடங்களில் மூன்று புதிய ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே செயல்படும் 3 ராணுவத் தளங்கள் சிக்கன்ஸ் நெக் வழித்தடத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை பாதுகாத்து வருகின்றன. இந்த நிலையில், மிசோரமின் பர்வாவில் அமைக்கப்படும் ராணுவத்தளம், சிலிகுரியின் தெற்குப் பகுதியைப் பாதுகாக்கும். இந்தியா, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதிக்கு அருகில் பர்வா அமைந்துள்ளதால் இந்தியப் படைகள் ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளை கண்காணிக்க உதவும்.
இதனிடையே பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைப் பாதுகாப்புப் படை விரிவுபடுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மிசோரம்-வங்கதேச எல்லையில் உள்ள 85 சோதனைச்சாவடிகளும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.
அங்கு, வெடிகுண்டுத் தாக்குதலைத் தாங்கக்கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் நிலத்தடியில் இயங்கும் ஆயுதக் கிடங்குகள், ட்ரோன்களை ஏவுதல், ட்ரோன் எதிர்ப்பு கண்காணிப்பு, உளவுத் தகவல்களை விரைவாகப் பகிரும் டிஜிட்டல் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் எல்லைப்பகுதியில் கண்காணிப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது இந்திய அரசு.
















