பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு கடந்த 3-ஆம் தேதியே நடைபெற்றதாகவும், ஜஸ்டின் மணிகண்டன் பின்னர் மாவட்ட பதிவாளரின் உத்தரவின்படி பத்திரத்திற்கு பதிவு எண் ஒதுக்கியதாகவும் அவரது தரப்பு வாதிட்டது.
அதேசமயம், கோயில் தரப்பில் சார் பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பத்திரப்பதிவு நடவடிக்கைகள் ஏற்கனவே 3-ஆம் தேதி நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட மற்றொரு சார் பதிவாளரும், மாவட்ட பதிவாளரும் ஏன் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும், ஜூலை 27-ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது.
















