பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார், பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அங்குள்ள நிலங்கள் பிரிவு மற்றும் முக்கிய ஆவணக் காப்பகங்களிலும் விசாரணை நடைபெற்றது.
நில விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆட்சேபனை கடிதங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அசல் பிரதிகள் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பத்திரப்பதிவு விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், திருக்கோயில் நிலங்கள் பிரிவில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிமும் வாக்குமூலம் பெற்றனர்.
பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய எஃப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டநிலையில், சிபிசிஐடி போலீசார், புதிய முதல் தகவல் அறிக்கையை முறைப்படி பதிவு செய்து, வழக்கை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
அலுவலக சோதனையை தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலுக்குப் பின்புறம் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போலீசார் நேரடியாகச் சென்று அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் எல்லைப் பகுதிகளை கள ஆய்வு செய்தனர்.
பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 6-ஆம் தேதி, தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்ட அந்தச் சட்டவிரோதப் பதிவு விவரங்களின் அசல் கணினிப் பதிவுகள் மற்றும் ஆவணக் காப்பகக் கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள் சரிபார்த்து, தங்களது கோப்புகளில் பதிவு செய்தனர்.
மேலும், பணியில் இணைந்துள்ள சார்பதிவாளர் மற்றும் அங்குள்ள அலுவலகப் பணியாளர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
















