அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் போரை தொடங்கியுள்ள நிலையில் மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தானின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதா சரிவை ஈரான் போர் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல்சார் வணிகம் மற்றும் எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
ஐநா சபையோ, சீனாவோ, ரஷ்யாவோ மற்ற ஐரோப்பிய நாடுகளோ முன்னெடுக்காத இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எகிப்து மற்றும் துருக்கி மறைமுகமாக துணை நின்றாலும் பாகிஸ்தானே முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது.
இதனாலேயே பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றன என்றாலும் முதல்கட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
பிறகு ஒருவழியாக 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையெழுத்திட்டுள்ளார்.
நிலையற்ற போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும் நீண்டகால அமைதிக்கான பாதையை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
ஒப்புக்கொண்ட ஒப்பந்த விதிகளை ஈரான் மீறியதால், இனி பேசிப் பயனில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் ரத்து செயப்படுவதாக அறிவித்து அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான், கத்தார் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், கடந்த ஜூன் மாதத்தில் கையெழுத்தான ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக ஈரான் கருதும் செயல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அதன்படி,ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில் போரை நிறுத்தத்துக்கான ஒப்பந்தத்தை தனது இராஜதந்திர வெற்றியாக கொண்டாடிய பாகிஸ்தான், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியதில் உலக நாடுகளின் பாராட்டையும் எதிர்பார்த்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறிய ஈரானும், ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்காவும் பாகிஸ்தானை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது.
இதன் விளைவாக கடின உழைப்பால் எட்டப்பட்ட அமைதி முயற்சிகள் வீணாகிவிட அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் போர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே “சாத்தியமான ஒரே வழி” என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் முறிவுக்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.
ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதும் அதைச் செயல்படுத்துவதும் வேறுபட்ட விஷயங்கள் என்பதை புரியாமல் செயல்பட்டதால் தான் மத்தியஸ்தராக பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஈரானும், மீட்டெடுப்போம் என்று அமெரிக்காவும் கறாராக நிற்பதுதான் அடிப்படை சிக்கல். இதற்கு தீர்வு காணாமல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை இருநாடுகளுமே மீறியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழி போக்குவரத்துக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையே ஈரானின் தாக்குதல்கள் காட்டுகின்றன.
இரு தரப்பும் போரைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் போர் நிறுத்தத்துக்கு இனி பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்று புவி சார் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
















