கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான உள்கட்டமைப்பு பணிகளை ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் சர்வரில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டு, ‘டார்க் வெப்’ வலையமைப்பில் கசியவிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவுக் கசிவு அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், சைபர் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசும், இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
















