பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் மடத்தின் செயல் அலுவலர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மடத்தின் சொத்துக்கள் தொடர்பான நிர்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளதாகவும், தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவுத்துறையினர் இது போன்ற முறைகேடான பத்திரப் பதிவுகளை எவ்வாறு மேற்கொள்கின்றனர் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பத்திரப் பதிவுத் துறையில் இது போன்ற முறைகேடான அதிகாரிகள் எவ்வாறு பணி புரிகிறார்கள் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் பணியிடை நீக்கம் மட்டும் செய்யப்பட்டது போதுமானது அல்ல எனவும், இதுபோன்ற அதிகாரிகள் பணியில் தொடரக் கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
















