செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாம்பாக்கம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைத்த பணிக்கான தொகையை விடுவிக்க, ஊராட்சிமன்றத் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீரா, ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஜி-பே மற்றும் நேரடியாக பணம் பெற்றதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்கிற வீராசாமி கட்சியில் இருந்து நீக்க்கப்பட்டார். தொடர்ந்து அவரை தாளம்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீராசாமி தான் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும், தன்னிடம் வாங்கிய பணத்தை சம்பந்தப்பட்ட நபர் திருப்பிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
















