முறையான பயண ஆவணங்கள் எதுவுமின்றி சுற்றித் திரிந்த அமெரிக்கர் ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உளவு பார்க்க இந்தியாவிற்கு அனுப்பப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்து நிலையில் அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சோனெளலி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட நேபாள எல்லையில் SSB என்று அழைக்கப்படும் ‘சஷஸ்த்ர சீமா பல்’ (SSB) படையின் 22வது படைப் பிரிவினரிடம் அத்துமீறி சுற்றித் திரிந்த அமெரிக்கர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
SSB படை வீரரின் பிடியிலிருந்து தப்பித்து நேபாளத்திற்குள் நுழைய முயன்ற அந்த நபரைக் கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜோர்டான் பிரவுன் என்ற அந்த நபரிடமிருந்து 31,460 ரூபாய் ரொக்கம், இரண்டு அலைபேசிகள், மத நூல்கள், ஒரு AI TRANSLATOR மற்றும் ஒரு சீன பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட், விசா போன்ற எந்தவொரு முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லாத நிலையில், கைது செய்யப் பட்டுள்ள ஜோர்டான் பிரவுன் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) 21 மற்றும் 23-வது பிரிவுகளின் கீழ் சோனாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தான் ஒரு அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் அதிகாரி என்றும் கூறியுள்ள ஜோர்டான் பிரவுன், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்குச் சென்றிருந்ததாகவும், அங்கு தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு கடல் வழியாக இலங்கைக்குச் சென்று அங்கிருந்து கடல்வழியாகவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இந்தியா வந்ததாகவும் அப்போதிருந்து கோவாவில் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார். கோவாலில் இருந்து பெங்களூர் சென்று பின்னர் அங்கிருந்து சோனெளலி எல்லைக்கு வந்து அவ்வழியாக எல்லையைக் கடந்து நேபாளத்துக்குள் நுழைய முயன்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
பிடிபட்ட பிறகுதான் அவர் பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியாவில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
இலங்கை வழியாக நுழைந்தது மற்றும் எல்லைக்கு வருவதற்கு முன்பு கோவாவில் கழித்த காலம் உள்ளிட்ட அவரது பின்னணி விவரங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக மற்றொரு வழக்கில் கடந்த மார்ச் மாதம் NIA யால் கைது செய்யப்பட்ட 6 உக்ரைனியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சிஐஏ உளவாளியான மேத்யூ வான் டைக் ஆகியோர் கடந்த ஜூலை 3 ஆம் தேதி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.
கடந்த மே மாதம் மற்றொரு அமெரிக்கக் குடிமகனான ஃபெலான் டிராவிஸ் அந்தோனி, சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
இவையெல்லாம் தனிப்பட்ட சம்பவங்களா, அல்லது யாராவது இந்தியா-நேபாள எல்லையை ஒரு இடைவழிப் பாதையாகப் பயன்படுத்துகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனாலும் இந்தியாவின் எல்லை என்பது சிலர் நினைப்பது போல எளிதாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும்.
















