தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என கருத்து தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதால், 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், 12 வார கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம், 3 வார அவகாசம் மட்டும் வழங்கி, நவோதயா பள்ளிகள் அமைக்க ஏற்ற இடங்களை கண்டறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.
முன்னதாக, பிற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை அனுமதிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நவோதயா பள்ளிகள் தொடர்பாக இன்னும் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
அப்போது, “தமிழகம் இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது” என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்த நீதிபதிகள், பிற மாநில மாணவர்களைப் போல தமிழக மாணவர்களுக்கும் அந்தக் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், மும்மொழிக் கொள்கையை ஆரம்ப வகுப்புகளிலேயே கற்பிப்பது குறித்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
















