நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
நிலக்கரி, டீசல் என்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், ‘ஹைட்ரஜன்’ ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்த ரயில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் – லலித் கேரா இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த் – சோனிபட் இடையே 10 பெட்டிகளுடன் மணிக்கு 120 கிலோமீட்டர்வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் நாளை நடைபெறும் விழாவில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் மூலம், உலகளவில் ஹைட்ரஜன் ரயில்களை வெற்றிகரமாக இயக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது
















