ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவில் அமெரிக்கா முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி அதிகபட்ச வரி வரம்பை 100 சதவீதமாக குறைத்துள்ளது. இந்தியாவுக்கு இதனால் என்ன லாபம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யாவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கவும் அந்நாட்டுக்குச் செல்லும் வருவாயைத் தடுக்கவும் திட்டமிட்டு வந்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத அசுர வரி விதிக்க முடிவு செய்திருந்தது.
உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் குறைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டிருந்தது.
வரிகளைத் தவிர, சட்ட விரோதமாக எண்ணையை ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ என்று அழைக்கப்படும் டேங்கர்கள் மீதான தடைகளும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த வாரம் மறைந்த அமெரிக்கச் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் முன்மொழிந்த சட்ட வரைவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வழிவகை செய்யப் பட்டிருந்தது.
ரஷ்யாவிடமிருந்து அதிகமாக கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய ஐந்து நாடுகளையும் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளையும் குறிவைத்து இந்த புதிய சட்டம் திட்டமிடப் பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தேவையான திருத்தங்களுடன்கூடிய புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய சட்டம், உக்ரைன் போருக்கு பிந்தைய உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், எரிசக்தி அச்சுறுத்தல்களை வெகுவாக குறைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக 2022-ல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் எண்ணையை தள்ளுபடி விலையில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
தேசிய நலன், கட்டுப்படியாகும் விலை மற்றும் விநியோகப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் எரிசக்தி இறக்குமதிகள் மேற்கொள்ளப்படுவதாக ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது.
மேலும் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் சர்வதேசக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதோடு, நுகர்வோருக்குக் கட்டுப்படியாகும் விலையில் எரிபொருள் கிடைப்பதையும் உறுதி செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்து, தங்களின் தேவையை படிப்படியாக குறைத்து வரும் நாடுகளுக்கு இந்த சட்ட மசோதாவில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு தேவை என்று கருதினால், இந்தத் தடைகளைத் தற்காலிகமாகத் தள்ளுபடி செய்யும் பிரத்யேக அதிகாரத்தையும் அதிபர் ட்ரம்புக்கு இந்த புதிய சட்ட திருத்த மசோதா திருத்தம் வழங்குகிறது.
லிண்ட்சேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், எந்த தடையும் இல்லாமல் மசோதா நிறைவேற நல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட இந்தத் தடைகள் மசோதா, அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்காகச் செல்வதற்கு முன்பு, செனட் சபையில் நடைமுறைத் தடைகளைக் கடந்து, பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாலும், 26 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த மசோதா, வெள்ளை மாளிகையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இறுதிக் கட்டண முறையை அமெரிக்கா எப்படி செயல்படுத்துகிறது ? இந்தியாவுக்கு ஏதேனும் விலக்கு விதிகளைப் பயன்படுத்துகிறதா ? என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு இது லாபமா என்பதை முடிவு செய்ய முடியும்.
















