பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பழனி கோயிலுக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள் போலி ஆவணங்கள் கொண்டு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லிங்கா அவென்யூ பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு 8க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜஸ்டின் மணிகண்டன் அங்கு இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதே போல வழக்கில் தொடர்புடைய பத்திர எழுத்தர் இல்லத்திலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். குழுக்களாக பிரிந்து செயல்படும் சிபிசிஐடி அதிகாரிகள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பத்திர எழுத்தரும், ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பருமான ஜெயபிரகாஷ் என்பவரின் இல்லத்தில் சோதனை நடத்தினர்.
அதன்படி 10க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் குறித்து சோதனை நடத்தியதோடு அவரிடம் நிலமோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர்.
















