நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மனின் உடல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சிறைக் காவலர்கள் 3 பேர் மற்றும் சிறை கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், உரிய நிவாரணம் கேட்டும் சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரிவர்மனின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.
அப்போது, சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை அமைச்சர்கள் வழங்க முன்வந்தனர். இதனை நிராகரித்துவிட்ட குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
பின்னர், வழக்கறிஞர்கள் மற்றும் ‘பப்ளிக் வாய்ஸ்’ அமைப்பு பிரேத பரிசோதனை வீடியோவை ஆய்வு செய்த பிறகு, சபரி வர்மனின் அக்கா கெளதமி உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து சபரிவர்மனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சபரிவர்மனின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அமரர் ஊர்தியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், சபரி வர்மன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அதுவுரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லியிடம் அரசு வழங்கிய நிவாரணம் மற்றும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டு சபரிவர்மனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
















