பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் (Mastung) பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் விடுதலைப் படை அறிவித்துள்ளது.அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பலுசிஸ்தானில் உள்ள மஸ்துங் (Mastung) பல ஆண்டுகளாகவே பலூச் விடுதலை இராணுவத்தின் தாக்குதல்களின் மையமாக இருந்து வருகிறது. 2018-ல் அப்பகுதியில் தேர்தல் பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். 2023-ல் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 55-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.
பலூசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது ‘பலூச் விடுதலைப் இராணுவத்தினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப் படுகிறது.
தனிப்பட்ட தாக்குதல்களில் இருந்து, பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பதுங்கித் தாக்குதல்கள், கூடுதல் படைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் நீடித்த துப்பாக்கிச் சண்டைகள் என பிரிவினைவாத அமைப்பு தனது அதிநவீன நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து எந்தஅதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்காத பாகிஸ்தான் அரசு, தாக்குதலுக்குப் பிறகு, சிக்கிக்கொண்ட வீரர்களை மீட்கவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் (gunship helicopters) கூடுதல் படைகளையும் மஸ்துங் பகுதிக்கு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BLA-வின் செய்தித் தொடர்பாளர் ஜியந்த் பலூச் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் அமைப்பின் உயர்தர “ஃபதா படைப்பிரிவு” (Fatah Squad) பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், அப்பகுதிக்கு விரைந்து வந்த கூடுதல் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப் பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றதால் பலூசிஸ்தானை சிந்து மாகாணத்துடன் இணைக்கும் பாகிஸ்தானின் மிக முக்கியமான சாலைத் தொடர்புகளில் ஒன்றான குவெட்டா-கராச்சி தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்புப் படைகள் மூடியதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் வழியில் சிக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனை, கௌஸ் பக்ஷ் ரைசானி நினைவு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பல மருத்துவ மையங்களில் பலூசிஸ்தான் அரசு அவசர நிலையை அறிவித்தது.
பாகிஸ்தானின் ராணுவ வாகன அணிவகுப்புகள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் மீண்டும் குறிவைத்து பலூச் விடுதலை இராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இது பலுசிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவாலை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
















